வாகன தணிக்கை பணிக்காக மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு இ-சலான் கருவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி சஞ்சீவி நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் சிவராசு மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சாலை விதிகளை மீறுவோருக்கு உடனடியாக அபராதம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதில் தமிழ்நாடும் இணைந்துள்ளது என்று தெரிவித்தார். அந்த திட்டம் தற்போது திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் இருப்பதை மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சாலை பாதுகாப்புக்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்சி-செங்கல்பட்டு இடையிலான சாலையில் அதிக விபத்துகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதனால் இங்கு சாலை விதிகளை மீறும் வாகனங்களை தானியங்கி முறையில் கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இதர சாலைகளிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார். சாலை விபத்துகளில் 60 சதவிகித உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகிறது என்று கூறிய அமைச்சர், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து
கடந்த 6 மாதத்தில் 15 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சாலைப் போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதில் தமிழ்நாட்டை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி இதர மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருவதையும் குறிப்பிட்டார். சாலை விபத்து மூலம் உயிரிழப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வாகன உரிமம் ஒரு மணி நேரத்தில் வழங்கவும், ஓட்டுனர்-பழகுனர் உரிமம் ஆன்லைன் மூலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், விரைவில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.