திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் பாதிப்புக்காரணமாக ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூபாய் ஐம்பதாயிரம் வழங்க வேண்டும் என்றும்; 100 நாள் வேலைப் பணியாளர்களை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மையம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான விவசாயிகள் இன்று(ஜனவரி 18) திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல்:
அப்போது, இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும்; வருவாய் கோட்டாட்சியர் வராததால் கொந்தளித்த விவசாயிகள் திருச்சி - திண்டுக்கல் சாலையின் குறுக்கே அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பியும், நிவாரணம் கேட்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை மணப்பாறை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை