பாமகவின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜிகே மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே.மணி, "வாக்குப்பதிவு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று திமுக ஆட்சியில் இருந்தபோது நடவடிக்கை எடுக்காமல் தற்போது கூறுகிறார்கள். இந்த முறை வந்தால் நல்லது என்பதுதான் பாமக.வின் கருத்தாகும்.
ரஜினி, கமல் இணைவது குறித்து செய்திகள் மட்டுமே வந்துள்ளன. அவை நடக்கும்போது பார்த்துக் கொள்வோம். தமிழ்நாட்டிலுள்ள பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று பாமக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த வகையில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதே போன்று திருச்சி, மதுரை, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால் தமிழ்நாடு வளர்ச்சியடையும் வகையில் அரசின் நலத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும்.
ஜனவரி 4 ஆம் தேதி பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் திருவிழா மாநாடு நடைபெறுகிறது. இதில் ஐந்து லட்சம் பெண்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். இதற்கு முன்னதாக டிசம்பர் 29ஆம் தேதி திருச்சியில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.