திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வியில் பயிற்றுவித்த வணிகவியல் பாடப்பிரிவு இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவிகளின் நிலை குறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மீண்டும் ஆங்கில வழி கல்வியில் பதினொன்றாம் வகுப்பில் வணிகவியல் படப்பிரிவு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது பதினொன்றாம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது. இதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தங்களது மேற்படிப்பு தொடர விண்ணப்பித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் ஆங்கில வழிக் கல்வியில் பதினொன்றாம் வகுப்பிற்காக இருந்த வணிகவியல் பாட பிரிவானது இந்த ஆண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பெற்றோர்கள் இன்று (மே 31) பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் தங்களிடம் போதுமான ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் ஆங்கில வழி வணிகவியல் பாடப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு ஆங்கில வழி வணிகவியல் பாடப்பிரிவை தொடர முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் மாணவிகளும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், "தங்களது பிள்ளைகள் இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வந்தனர் தற்பொழுது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லும்போது வணிகவியல் பாடப்பிரிவு ஆங்கில வழி கல்வி ரத்து செய்யப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும், தொடர்ந்து இந்த பள்ளியில் மீண்டும் வணிகவியல் பாடப்பிரிவு ஆங்கில வழி கல்வி தொடர வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தனர்.
இதேபோல கடந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி மீண்டும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு வரும் அடுத்த ஆபத்து?