திருச்சி: இந்திய ராணுவத்தில் இளநிலை அதிகாரிகள், மற்ற தரவரிசைப் பணிகள் மற்றும் அக்னி வீரர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதன்படி, உடல் தகுதித்தேர்வுக்கு முன்பாக, கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அக்னிவீர் திட்ட ஆட்சேர்ப்பு தொடர்பாக, திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குநர் கர்னல் தீபக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை, ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக ஆன்லைனில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தியா முழுவதும் 176 இடங்களில் இந்த பொது நுழைவுத்தேர்வு நடைபெறும். திருச்சி மண்டலத்தைப் பொறுத்தவரை, திருச்சியில் இரண்டு இடங்களிலும், திருநெல்வேலியில் ஒரு இடத்திலும் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வு கட்டணம் 500 ரூபாய், இதில் 250 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும், 50 சதவீத செலவை ராணுவம் ஏற்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு நடைபெறும். கணினி அடிப்படையிலான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வை ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ரயில்வே - அஞ்சல் துறை இணைந்து சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளது