கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகள் சவுமியா(29) . இவர் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை அருகே கண்ணணூரில் உள்ள இமயம் கல்வி நிறுவனத்தில் வேளாண் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. இதற்காக பேராசிரியை சவுமியா கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புகள் நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வகுப்புகள் முடிந்தபிறகு விடுதியிலுள்ள தனது அறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக ஆசிரியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அறையில் சவுமியா தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலில் ரத்த காயங்களும் இருந்தது என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ஜம்புநாதபுரம் காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த ஆண்டு இதே கல்லூரியில் மாணவர் ஒருவர் கல்லூரியின் விடுதி காப்பாளரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, கல்லூரி மாணவர் ஒருவர் மது போதையில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அரங்கேறியது. அதனால் இக்கல்லூரியில் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் சம்பவங்கள் நடைபெற்று வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் கிரிக்கெட் சூதாட்டத்தால் பறிபோன உயிர்