திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருமலையைச் சேர்ந்தவர் பூச்சிக்கவுண்டர். இவர் கடந்த சில வருடங்களாக அவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக சில நபர்களை வைத்து சூதாட்டம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து காவல் துறையினருக்கு வந்த புகாரின் காரணமாக மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தாவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்தனர்.
அங்கு, பூச்சிக்கவுண்டர் தோட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினர். இது குறித்து தகவலறிந்த பூச்சிக்கவுண்டர் தலைமறைவாகியுள்ளதால் காவல் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து புத்தாநத்தம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.