தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சலீம் (வயது 42). இவர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறியும், அதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடந்த ஜூலை 29ஆம் தேதி அதிகாலை நான்கு மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. பின்னர், அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கு சலீமின் உடல், பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா, சலீமின் குழந்தைகள், அவரது குடும்பத்தினர் ஆகியோருடனும், சமூக ஆர்வலர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருடனும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன் சலீமின் புகைப்படத்துடன் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ”எனது கணவரின் உடல் அடக்கம் செய்யப்படும்போது தமிழ்நாடு அரசின் கரோனோ விதிமுறைகள் அமலில் இருப்பதாகக் கூறி அவரது உடலை எங்களிடம் காட்டவில்லை. இதனால் என் கணவரின் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது.
முக்கியமாக 12 மணி நேரம் காலதாமதமாக உடல் வழங்கியதால் கணவரின் உடல் உள்ளுறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள கரோனா உயிரிழந்தவர்கள் பட்டியலில், என் கணவர் பெயர் இல்லை.
எனவே, கரோனா பாதிப்பில்லாத என் கணவருக்கு சிகிச்சையை தவறுதலாக அளித்து அதனால் துர்மரணம் ஏற்பட்டுள்ளது. எனது கணவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழு மூலம் உடற்கூறாய்வு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உ.பி.யில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்!