தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவையடுத்துள்ள பண்டாரவிளையின் சுயம்புலிங்க சுவாமி கோவில் தெருவைச் சார்ந்த அன்னலட்சுமி. இவர் கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு சரவணன் என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த பண்டாரவிளை திமுக வர்த்தகர் அணி பிரமுகர் சுந்தர்ராஜன் மகன் ஜெயபாலன், அன்னலட்சுமியை அருவறுக்கத்தக்க வகையில் பேசி அவரை தாக்கியதில் அவருக்கு முன்பக்க தலையில் வீக்கமும், கையில் காயமும் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயபாலன் பண்டாரவளையில் உள்ள பொன் ராமசாமி என்பவர் பெட்டிக்கடைக்குச் சென்று அவரது மகன் பெரியதுரையை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளார்.
பின்னர் மாணிக்க நாடார் தெருவில் உள்ள செந்தூர்பாண்டி என்பவரின் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அன்னலட்சுமி உள்ளிட்டோர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் திமுக பிரமுகர் மகன் ஜெயபாலன் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த ஜெயபாலன் தற்போது தலைமறைவாகி உள்ளதாக அறிய முடிகிறது.
பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் திமுக பிரமுகர் மகன் ஜெயபாலன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பண்டாரவிளையை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.