திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்கார வேலன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாற்று இடம் பார்த்து கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இருப்பினும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சிங்காரவேலன், ஜீவா காலனி உள்ளிட்ட ஏழு இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர், டாஸ்மாக் நிர்வாகிகள் ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கடையை அகற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட போவதாகவும், கடையை அடித்து நொறுக்கிவிடுவோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.