திருப்பூர்: கொங்குநகர் அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா இன்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் ஏ.சக்திவேல் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “வாக்களிக்காதவர்களுக்கும் இந்த அரசு செயல்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கொங்கு மண்டலத்துக்கு வந்தபோது தான் சொன்னார். இங்குள்ளவர்கள் நிலம் கொடுத்தால், தொழிற்பேட்டை அமைக்க வாய்ப்புகள் உண்டு.
தொழிற்பேட்டைகளை அமைத்தால் மேலும் தொழில் வளர்ச்சி அடையும். இங்கிருந்து வெளிநாடு சென்ற பலர், மீண்டும் தொழிலுக்காக இங்கு திரும்புகின்றனர். முதலீட்டாளர்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈர்க்கும்போது, அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. ஜவுளித் தொழிலில் தொடர்ந்து கோலோச்சுகிறோம். ‘டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ பக்கம் இங்குள்ள தொழில்துறையினர் நகர வேண்டிய தருணம் இது.
ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத்தில் தள்ளாடுவதால், இன்றைக்கு டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் நோக்கி நாம் நகரலாம். டெக்ஸ்டெக், மெடிடெக், ஸ்போர்ட்ஸ் டெக், அக்ரோ டெக் ஆகியவற்றில் எதிர்காலம் சிறக்கும். தொழில்துறையின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்த சொல்லி உள்ளார்.
டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புதிய ஆலோசனைகளை தொழில்துறை முழுமனதோடு வரவேற்கிறது. தொழிலாளர்களுக்கு 5000 வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைக்கின்றனர். இடம் கிடைத்தால் நிச்சயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். வரும் ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் இங்குள்ளவர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஒன்றிய அரசை சார்ந்ததாகவே உள்ளது. அதனை உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
திருப்பூர் பின்னலாடை துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தொழில்துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார். மின் கட்டண உயர்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசின் கொள்கை, இதையும் அவர்கள் தான் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூரில் ஆயில் மில் ஓனர் வீட்டில் கொள்ளை முயற்சி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!