திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனபால்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவருக்கு சில நாட்களாக வலது தோளில் தழும்பு போன்ற தோள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த தனபாலிடம் தெரிந்தவர்கள் சிலர், பொள்ளாச்சியைச் சேர்ந்த பரம்பரை சித்த வைத்தியரான மருகு மகேந்திரன் என்பவர் சிறப்பாக சிகிச்சை அளிப்பதாகவும், அவரிடம் அழைத்துச் சென்றால் தோள் பாதிப்பு சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய தனபால், சித்த வைத்தியர் மகேந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அவரும் தோள் வியாதியை குணப்படுத்த கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மூலிகை மூலம் குணப்படுத்துவதாகக் கூறி கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அந்த மூலிகையை தோள் பாதிப்பு உள்ள இடத்தில் தடவியுள்ளார்.
அதை தடவிய சில மணி நேரத்தில் பாதிப்பு சரியாகாமால், தீயில் வெந்தது போன்று தழும்பு உருவாகியுள்ளது. இதைக் கண்டு பயந்த தனபால், மகளை ஆங்கில மருத்துவரிடம் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சித்த வைத்தியர் தடவிய மருத்து மூலிகை இல்லை என்றும், டைல்ஸ் கற்களுக்கு பூசுப்படும் ஆசிட் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியின் தந்தை தனபால் கூறுகையில், ‘சித்த மருத்துவர் மருகு மகேந்திரன் எனது மகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மருந்தில் ஆசிட்டை பயன்படுத்தியுள்ளார். இதற்கு அவரிடம் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகள் இந்த நிலைக்கு காரணமான சித்த வைத்தியர் மகேந்திரனுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை மாணவி சித்த மருத்துவத்தில் இந்திய அளவில் முதலிடம்