திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 800க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில், பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக தலா ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்
இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் எனக் கூறி பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணிகள் முடங்கின. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் எங்களுக்கு, நிறுவனம் உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. எங்கள் சம்பள தொகையை ஓரிரு மாதங்கள் என நிலுவையில் வைத்து, பின்னரே தருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால், எங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. கடந்த மாதம் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக இதுபோன்ற நடவடிக்கைகளிலேயே ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து நிலுவையில் உள்ள ஊதியத்தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். மாதந்தோறும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
ஒப்பந்த நிறுவனம் மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக ஒப்பந்த நிறுவன நிர்வாகத்திடம் கேட்டபோது, "மாநகராட்சியில் ஒப்பந்தத்தின் பேரில், வழங்கவேண்டிய தொகையை வழங்கவில்லை. அதன் காரணமாக, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த தொகையை மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்றனர்.
இதையும் படிங்க: ஊதியம் தராத நிறுவனத்தின் பேருந்தை சொந்த ஊருக்கு ஓட்டிச் சென்ற ஊழியர்!