வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு இளைஞர்களின் படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோவை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியுள்ளனர்.
இந்நிலையில் பொய் வீடியோவில் இடம் பெற்ற பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் பெற்றோருடன் வந்து குடியாத்தம் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோவிட்-19 வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் கோவிட்-19 வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை பற்றி கவலைப்படாமல் ஹரித்வாரில் குவிந்த பக்தர்கள்