கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மொசலிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரிப். இவரது மனைவி ரோசின் சுல்தானா பிரசவத்திற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு இஸ்லாமிய பெண் போல் உடையணிந்து வந்த பெண் ஒருவர் ரோசின் சுல்தானாவிடம் ”உங்கள் குழந்தையை கொடுங்கள் பார்த்துவிட்டு கொடுக்கின்றேன்” எனக்கூறி குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சுவது போல் நடித்து, தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோசின் சுல்தானா, இது குறித்து செவிலியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை கடத்திய பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் தேவங்கர் தெருவை சேர்ந்த நகினா என்பவர் தனக்கு குழந்தை இல்லாத காரணத்திற்காக மருத்துவமனைக்கு வந்த ரோசின் சுல்தானாவின் குழந்தையை கடத்தியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நகினாவை காவலர்கள் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்ட மூன்றே மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவலர்கள் குழந்தையை மீட்டுள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜோலார்பேட்டையில் 2 வயது குழந்தை இறப்பு - போலீஸ் விசாரணை