தூத்துக்குடி : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு மினி மாரத்தான் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
வ.உ.சி. கல்லூரியில் இருந்து தொடங்கிய போட்டி தமிழ் சாலை, வ.உ.சி. சாலை, கிரேட் காட்டன் சாலை, பழைய துறைமுகம், பெல் ஹோட்டல், ஜார்ஜ் ரோடு, தேவர்புரம் சாலை வழியாக 9 கி.மீ. தூரம் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.
இப்போட்டியில் ஆண்கள் 900 பேர், பெண்கள் 800 பேர் உள்பட மொத்தம் 1700 பேர் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வி கல்லூரியை சேர்ந்த பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரி மாணவன் நவீன் பிரபு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில் தென்காசி மாவட்டம் வெங்கடேஸ்வர புரம் கிராம கமிட்டி பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதலிடத்தையும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா இரண்டாம் இடமும், நாகலாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற போட்டியாளர்களில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மூன்று கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு இரண்டு கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 1 கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் நான்காம் இடம் பிடித்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையும், ஐந்து முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்க தொகையும் வழங்கி பாராட்டினர்.