தூத்துக்குடியில் மத்திய அரசின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 40 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சீர்மிகு நகரம் திட்டம் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்பு மாநகராட்சி அலுவலகத்திலிருந்து திடீரென மாயமானது.
இது தொடர்பாக இளநிலை உதவியாளர் ஞானசேகரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் விபி ஜெயசீலனிடம் விளக்கம் கேட்கையில், தூத்துக்குடி மாநகராட்சியில் 23 முக்கிய கோப்புகள் காணாமல் போனதாகவும் இது தொடர்பாக மாநகராட்சி இளநிலை உதவியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் வந்த செய்தி தவறானது என்றார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 18 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளை சீர்மிகு நகரம் திட்டத்தில் தேர்வு செய்து சீர்மிகு பள்ளிகளாக நவீனப்படுத்த ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், அதற்காக பணி ஆணைகள் தயார் செய்யும் நிலையிலிருந்த ஒரு கோப்பு மாயமாகியுள்ளதை குறிப்பிட்டார். மேலும், அந்தக் கோப்பை தேடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையதளத்தில் உள்ளதாக சொன்ன அவர், ஆகவே அந்த குறிப்பிட்ட கோப்பு காணாமல் போனதால் மாநகராட்சிக்கு இழப்போ, பணிகளுக்கு பாதிப்போ கிடையாது என்றார்.