தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாடாளுமன்ற எம்பிகளுக்கு வீடு அளித்தது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற எம்பியாக இருந்து அவர்களுடைய பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் எம்பிகளுக்கு கோட்டா என்று ஒன்று இருக்கிறது.
அந்த அடிப்படையில், ஒவ்வொரு முன்னாள் எம்பிகளுக்கும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்து அந்த வீட்டில் இருக்கக் கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. நான் மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்பிக்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு காரணம் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த அடிப்படையில், அதற்கான சரியான காரணம் எனக்கு இருந்தது என்கின்ற அடிப்படையில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. தூத்துக்குடியில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதாலும் இங்கு அதிகமான வேலைகள் இருந்ததால் நான் டெல்லிக்கு இப்போது அடிக்கடி செல்லவில்லை, அந்த வீடு அரசுக்கு சொந்தமானது.
ஆனால், வேண்டும் என்றே என்னை, ஒரு பெண்ணை அடிக்கடி வேண்டும் என்றே ஒரு வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் சமூக வலைதளத்தில் தவறாக பரப்பபட்டு வருகிறது. மேலும், அரசியலுக்கு பெண்கள் வரவே கூடாதா அரசியலுக்கு பெண்கள் வந்தாலே தப்பாக, சித்தரித்து போடுகிறார்கள்.
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நாங்களும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள், இது சம்பந்தமாக தூத்துக்குடியை சேர்ந்த ராஜவேல் என்பவர் மீது அந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் நிச்சயமாக அவர்கள் வழக்கு பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றிய அரசு என்கின்ற அந்த ஒரு வார்த்தையும் சில இடங்களில் உள்ளது.
தூத்துக்குடியில், பிஜேபி கிளை வாரியாக பயங்கரமான வளர்ச்சியடைந்து வருகிறது. இன்றைக்கு கனிமொழி மற்றும் கீதாஜீவன் அவர்களுக்கும் நன்றாக தெரியும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறப்போவது உறுதி. தூத்துக்குடியில் உள்ள என்னை, திட்டமிட்டு ஒரு பெண்ணை தப்பானவர் என்று சொல்கின்றனர்.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பை திசை திருப்ப இந்த மாதிரி ஒரு தவறான தகவலை பரப்பி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில், 10 நியாயமான கோரிக்கைகள் முன் வைத்தேன். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவறாக பரப்பி வருகின்றனர். கட்சி ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் மட்டும் மோத வேண்டுமே தவிர பெண்களை அசிங்கப்படுத்த கூடாது.
பெண்களைக் கேவலப்படுத்தினால் அவர்கள் வீட்டிற்குள் ஒழிந்து கொண்டு விடுவார்கள். வெளியே வர வேண்டிய தேவை இல்லை என்ற எண்ணத்தில் தயவு செய்து வைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கு பின்பு என்னை பின்பற்றி பல பெண்கள் அரசியலுக்கு வருவார்கள். பாரதிய ஜனதா கட்சியாக இருக்கட்டும் இல்லை, சாதாரண குடும்பத்தில் உள்ள பெண்களாக இருக்கட்டும் அரசியலுக்கு வரவேண்டும்.
அப்படி இருக்கும் போது நீங்கள் எதற்கெடுத்தாலும் தவறான தகவல்களை யூடியூப் சேனலில் பரப்பி வருகின்றனர். திமுக ஐடிவிங் இது மாதிரி நிறைய வெளிவிடுகின்றனர். முன்னாள் எம்பியை, ஒரு பெண்ணை உல்லாச விடுதி நடத்தினார் என கூறியது கேவலமான பேச்சு, பெண்களை ஆபாசமாக பொதுவெளியில், அரசியலில் இருக்கிற பெண்களை பேசாதீங்க, ஒவ்வொரு முறையும் தவறான வதந்திகளை அனைவரும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பெண்களுக்கு அவமானமாக இருக்கிறது. மேலும், பாஜக பெண்களை திட்டுவதற்கு பதிலாக, திட்டங்களை பற்றி கேளுங்கள். தவறான போட்டோக்களை சித்தரித்து போடுபவர்கள் மீது வழக்கு பாயும், அது மட்டுமில்ல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டஈடு நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். தவறான இதுபோன்ற செய்திகளை பரப்பியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பாஜக பந்த் அறிவிப்பினை திரும்பப்பெற்று அமைதிக்கு உதவவேண்டும்: கோவை எம்.பி.