தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள், கரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 536 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 398 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 10 நபர்கள் குணம் பெற்று வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, தூத்துக்குடி மாவட்டம் வந்தவர்களில் கிட்டத்தட்ட 160 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் சமூகப் பரவல் இல்லை.
முறையான அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழைபவர்களைப் பிடிக்க சோதனைச் சாவடியில் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலியான இ-பாஸ் மூலமாக தூத்துக்குடி மாவட்டம் வருவோரை கண்டுபிடிக்க சோதனைச்சாவடியில் இ-பாஸ் "க்யூஆர் கோடு" ஸ்கேனர் மூலம் அடையாளம் காணப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள் விதிமுறை மீறல் செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும்.
மே மாதத்தில் மட்டும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்
3 ஆயிரத்து 568 நபர் இங்கு திரும்பி வந்துள்ளனர். இதில் 158 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.