தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்படி பகுதியைச் சேர்ந்த கணேசனின் மனைவி செங்கமலம் (வயது 47). கணவரை 10 வருடங்களுக்கு முன்பே இழந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
தனது ஆண் குழந்தையுடன் சம்படியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர், சற்று மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி காலை சம்படியில் உள்ள காட்டுப்பகுதியில் செங்கமலம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஏரல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சம்படி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 34) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த சந்தன மகாராஜா (வயது 24) ஆகிய இருவரும் கடந்த 10ஆம் தேதி, செங்கமலத்தை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செங்கமலத்தை, ஆனந்த் செங்கலால் தலை, முகம் மற்றும் நெற்றியில் தாக்கியுள்ளார். இந்நிலையில், மயக்கமடைந்த செங்கமலம் நினைவு திரும்பினால் தங்களை காட்டிக் கொடுத்துவிடுவார் என பயந்து அவரைக் கொலை செய்து புதர் பகுதியில் இருவரும் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அன்று இரவே மகாராஜா சென்னை சென்றுள்ளார். ஆனந்த் சம்படியிலேயே தலைமறைவாக இருந்துள்ளார். இருவரையும் காவல் துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி சென்னையிலிருந்து சம்படிக்கு மகாராஜா வந்ததும் அங்கு கிடைத்த சாட்சிகளை வைத்து இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இக்கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையினரை, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.