தூத்துக்குடி: மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே அந்த இயக்கத்தின் மாநில தலைவர் இசக்கி ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (ஜூலை.3) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை கைது செய்து உடனடியாக விசாரிக்க வேண்டும்,
மேலும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கினை விரைவுபடுத்த வேண்டும்; ஓ. பன்னீர்செல்வம் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் சாதிய வன்மத்துடன் பேசி வரும் சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதன் பின்னர் இசக்கி ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென் மாவட்ட மக்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தி கூலிப்படையினை ஏவி பாட்டில் வீசி அசிங்கப்படுத்தியுள்ளார்.
'ஓபிஎஸ்ஸை எதிர்த்து எடப்பாடி தென் மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது’ - இசக்கி ராஜா அதிமுகவை அழித்து முதலமைச்சர் ஆகலாம் என்று எடப்பாடி பழனிசாமி கனவு காண வேண்டாம். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தென் மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது. பொது குழுக்கூட்டத்தில் பாட்டில் கொண்டு வீசி அவமானப்படுத்திய உங்களை நாங்கள் எது கொண்டு வீசுவோம் என எங்கள் வரலாற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது போல கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று வரை நடக்கவில்லை. ஆகவே முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் முதலமைச்சரும் ஒன்று சேர்ந்துவிட்டதாக சந்தேகம் எழுகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். பல்வேறு அமைச்சர்கள் கோடநாட்டில் சொத்துகளைப் பதுக்கி வைத்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியை விட்டு நீக்கி அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகினால் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்டத்தைத் தொடங்கிய ஈபிஎஸ்... ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?