தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே-22ஆம் தேதியன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர். அரசாங்க மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்கள், போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள், பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு:
நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 27 கட்டமாக விசாரணையை நடத்தி முடித்துள்ளது. ஒரு நபர் ஆணையத்தின் 27 கட்ட விசாரணை முடிவுகளை இடைக்கால அறிக்கையாக சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார். அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட சில வழக்குகள் தவிர, பெரும்பாலான வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி:
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'கடந்த மே 14ஆம் தேதி நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த இடைக்கால அறிக்கையின் மீது கவனமாக ஆய்வு நடத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையால் போடப்பட்ட வழக்குகளில் எந்தெந்த வழக்குகளை தமிழ்நாடு அரசால் திரும்பப் பெற முடியுமோ, அவை அனைத்தையும் வாபஸ் பெற முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை தூத்துக்குடி பொதுமக்கள் சார்பில் மனதார வரவேற்கிறேன். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட வேலை என்பது கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை; எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை அரசு மறு சீராய்வு செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் பதியப்பட்ட வழக்குகள் மற்றும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தேவையின்றி வழக்குத் தொடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டதாக அறியப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்த காரணத்தினால், அந்த குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திரும்பப்பெறப்படும் ஸ்டெர்லைட் வழக்குகள்:
ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்குகள், மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் மூலமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தவிர, தமிழ்நாடு அரசால் எந்தெந்த வழக்குகளை திரும்பப் பெற முடியுமோ அவற்றை தமிழக முதலமைச்சர் வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளார். மேலும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். எந்த ஒரு சூழலிலும் தவறான முன் உதாரணத்தை எடுத்துக்காட்டி விடக்கூடாது என்பதற்காக கவனமுடன் இடைக்கால அறிக்கையை, ஆய்வு நடத்தப்பட்டு இந்த வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
போராட்டக்களத்தில் பங்கெடுத்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளால் அவர்கள் சரியான வேலைகளுக்கோ, வெளிநாடுகளுக்கோ, கல்வியிலோ சேர முடியாத சூழல் இருந்தது. வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் இனி அந்த நிலை சீராகும்.
விரைவில் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தொடங்கும்:
தற்பொழுது கரோனா பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் அது தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மீது முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயம் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததும் தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மாற்றுவழி தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த்தொற்று காரணமாக, தற்போது ஒரு நபர் ஆணைய விசாரணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு விரைவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த முழு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்வதாக நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உறுதி அளித்துள்ளார். தற்போது உருவாகியுள்ள கருப்பு பூஞ்சை நோய் குறித்து சுகாதார துறையின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சரும் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். அதற்கான சிகிச்சை நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு திமுக அரசு துணை நிற்காது' என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பணி ஆணையை கனிமொழி எம்.பி., வழங்கினார். நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வருவாய் அலுவலர் கண்ணப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.