விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, சீமானை கைது செய்து, நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வடக்கு மாவட்ட துணைத் தலைவரான வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் முகம் முழுவதும் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு, உடலில் ராஜீவ் காந்தி படத்தினை தாங்கியவாறு அலுவலக வாயில் முன்பு பாய் விரித்து படுத்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் சண்முகராஜ், கயத்தார் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் முத்து, துணைத் தலைவர் ராமச்சந்திரன், வர்த்தக பிரிவுத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் இந்த நூதன போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விஜயா உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: அரசாணை வெளியிடக் கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்!