தூத்துக்குடி: கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையொட்டி, தூத்துக்குடி ஆவல்நத்தம் கூட்டுறவு சங்கத்தில் நகையை அடகுவைத்தால், 10 நாள்களில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நகையை அடகு வைக்க கூட்டுறவு சங்கத்தில் குவிந்தனர். ஏராளமானோர் நேற்று குவிந்ததால், சிலருக்கு டோக்கன் வழங்கிவிட்டு நாளை வருமாறு கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, டோக்கன் பெற்றவர்கள், இன்று கூட்டுறவு சங்கத்திற்கு வந்தபோது, நகையை இன்று அடகு வைக்கமுடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகை மதிப்பீட்டாளர் இல்லாமலே நகை அடகு வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய மக்கள், வெளியூரில் இருந்து சிலர் இங்கு வந்து நகைகளை அடகு வைத்ததாகவும், கூட்டுறவு சங்க ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்து நகைகளை கடன்வைத்து, பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தப்போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நகைகளை அடகு வைத்து இன்று (பிப்.27) பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கடன் தள்ளுபடி என்பது அரசு விதிமுறைகளின்படிதான் நடைபெறும் என்றும் விளக்கம் அளித்தனர். இதன்பின்பு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் கேட்டபோது, நேற்றைய தினம் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானோர் நகையை அடகு வைக்க வந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. கடன் தள்ளுபடி அரசு விதிமுறைகளின்படிதான் நடைபெறும் என்றனர்.
இதையும் படிங்க: ’மோடியின் ரிமோட் கண்ட்ரோல் அதிமுக அரசின் பேட்டரியை இத்தேர்தலில் எடுத்திடுவோம்’