திருவாரூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனையத்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நான்கு வயது சிறுவன் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியக் கூடிய பயிற்சி மருத்துவர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பசும்பரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 வருட மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று காலை அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் டைபாய்டு காய்ச்சல் என்றும், டெங்கு காய்ச்சல் இல்லை என்றும் முடிவு வந்துள்ளது.
மேலும், பயிற்சி மருத்துவர் சிந்துவின் ரத்தத்தில் வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சல் இருக்குமா என்கிற அடிப்படையில் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரத்தமாதிரி முடிவு வருவதற்கு முன்பே சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவருடைய சொந்த ஊருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது பிணவறைக்கு எதிரில் காத்திருந்த சக மருத்துவர்கள் கதறி அழுதபடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கக்கூடிய விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.