உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் குறித்த பயம் மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மக்களை விழிப்படையச் செய்வதற்காக பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் தலைமையில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், அலுவலகங்கள், திரையரங்குகள், பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, விழிப்புணர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு திரையரங்குகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் வழங்கப்பட்டன.
இவர்களின் நிறுவனங்களில் கரோனா வைரஸ் பதாகைகளை ஓட்டி, பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், துணை ஆட்சியர் கிஷோர்குமார், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சமூக அமைப்புகள் சார்பில் கரோனா விழிப்புணர்வு பரப்புரை