பிரியாணி என்ற சொல்லைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறாத மக்களே கிடையாது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் வீட்டு திருமணத்தில் பிரியாணிக்கென தனி இடமும், மவுசும் உண்டு. ஆனால், அத்தகைய இஸ்லாமியர்கள் வீட்டு திருமணத்தின் பிரியாணிக்கு "நோ கார்டு" காட்டியுள்ளது உலகை மிரட்டும் கரோனா வைரஸ்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்பே திருவண்ணாமலை மாவட்டம் பெரிய மசூதி அன்ஜுமன் ஷாதி மஹாலில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுமையாதபசும் என்ற பெண்ணுக்கும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞருக்கும் திருமணம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சமூக விலகலைக் கருத்தில்கொண்டு அரசு நடைமுறைகளை பின்பற்றி, இந்தத் தம்பதியரின் திருமணம் நடைபெற்றது. அதாவது, திருமண நிகழ்வில் மணப்பெண் வீட்டு சார்பாக 5 நபர்கள், மணமகன் வீட்டு சார்பாக 5 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கிருமிநாசினிகள் கொண்டு கைகளை சுத்தம்செய்த பின்னர், கையுறைகளுடனும், முகக் கவசங்களுடனும் தான் திருமணத்திற்கு வருகைத் தந்தனர்.
இதேபோன்று திருமண நிகழ்வில் முக்கியமாகப் பரிமாறப்படும் பிரியாணியையும் தவிர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளிமாநிலத்திற்கு செல்ல காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்