கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அவா் அறிவுறுத்தினார்.
மக்கள் ஊரடங்கையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் வேலூர் சாலை, மத்தியப் பேருந்து நிலையம், தேரடி வீதி, அண்ணா சாலை, காய்கறிச் சந்தை, பூ சந்தை ஆகியவையும், முக்கியப் பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், சிறு கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு அனைத்துச் சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 341ஆக உயர்வு!
பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். மக்கள் ஊரடங்கையொட்டி திருவண்ணாமலை நகரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் என எதுவும் இயக்கப்படவில்லை. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தடுக்க நகரம் முழுவதும் ஆங்காங்கே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிரிவலப் பாதையில் செல்லும் வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர்.