திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜூலை30) புதிதாக 188 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6011 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த இரண்டு பேர், சேலம், கேரளா மற்றும் பெங்களூரில் இருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 71 பேர், முன் களப்பணியாளர்கள் ஏழு பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 23 பேர் உள்ளிட்ட 188 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள், மாவட்டத்தில் உள்ள செங்கம், வெம்பாக்கம், தச்சூர், கிழக்கு ஆரணி, போளூர், சேத்பட், நாவல்பாக்கம், தண்டராம்பட்டு, வந்தவாசி, ஆக்கூர், போளூர், காட்டாம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தெள்ளார், திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட சுகாதார வட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக நோயாளிகளிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, அது மற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதிப்பாக தொடர்ந்துவருகிறது.
நேற்றுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து இரண்டு ஆக உள்ளது, இதுவரை சிகிச்சை பலனின்றி 55 பேர் உயிரிழந்துள்ளனர்.