திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் தினமான நேற்று ஆலயத்தில் திருவூடல் உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. நேற்று அதிகாலை நடை திறந்து பஞ்சமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, உற்சவ மூர்த்தியான அண்ணாமலையாருக்கு அதிகாலை ஒரு மணிக்குத் தொடங்கிய மகா அபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, ஆலயத்தில் இருக்கும் அதிகார நந்தி உள்பட 6 நந்திகளுக்கு வித விதமான பழ வகைகள், பலகாரங்களைக் கொண்டு பிரமாண்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
பின்பு அண்ணாமலையார் கேடயத்தில் பட்டம் கீர்த்தி வாசன் சிவாச்சாரியாரும் ஸ்தானிகம் கந்தன் சிவாச்சாரியாரும் கேடயத்தில் அமர்ந்து கோவில் மிராசு விஜயகுமார் சாமிக்கு குடை போட ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பெரிய நந்தி அருகே வந்த அண்ணாமலையாருக்கு பிரமாண்ட மண்டகப்படி நடைபெற்றது. பின் ஆனந்த நடனமாடி வந்த அண்ணாமலையார் திட்டி வாசல் படியில் சூரியனுக்குக் காட்சி அளித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரோகரா என்ற கோஷமிட்டு வழிபட்டார்கள். பின்பு 16 கால் மண்டபம் வந்தடைந்த அண்ணாமலையார் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகா தீபாராதனை நடைபெற்று மாடவீதி புறப்பட்டுச் சென்றார் .
இதையும் படிங்க: மாட்டு பொங்கலன்று சங்கமிக்கும் நாட்டு மாடுகள்!