திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய துப்புரவு பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஸ்ரீ ஜெகதீஷ் ஷிர்மானி இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் நிலை குறித்து நேரில் ஆய்வுசெய்தார். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கைகளால் துப்புரவு பணிகளில் ஈடுபடும் முறையை ஒழிக்க, துப்புரவு பணியாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதனடிப்படையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களின் ஊதியம், சுகாதாரம், மருத்துவவசதி, துப்புரவு பணியாளர்களுக்கான உபகரணங்கள், துப்புரவு பணியாளர்கள் பெறும் அரசு நல திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கான வீடு மற்றும் கல்வி குறித்து ஆராய்வதற்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பேசிய துப்புரவு பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஸ்ரீ ஜெகதீஷ் ஷிர்மானி, கைகளின் மூலம் துப்புரவு அகற்று பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை முறைபடுத்தி அவர்கள் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அள்ள முறைபடுத்தக் கோரி தமிழ்நாடு அரசு அனுகியது எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 25 துப்புரவு தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற துப்புரவு பணிகளில் ஈடுபடும்போது மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். கைகளால் அள்ளும் துப்புரவு பணிகளில் இருந்து விடுபடும் துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக தற்போது 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் 25 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ரோபோ இயந்திரம் மூலம் குப்பை அள்ளும் பணிகள் நான்கு இடங்களில் சோதனை முறையில் நடைபெற்று வருவதாகவும், இந்த சோதனை வெற்றியடைந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆகிய இடங்களில் இந்த திடடம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். கைகளால் குப்பைகளை அகற்றும் முறையை முழுமையாக ஒழித்து இயந்திரங்களின் மூலமாக குப்பைகளை அள்ளும் பணிகளை மேற்கொள்வதுதான் மத்திய அரசின் இலக்கு என்று கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.