திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கக் கோரி 252 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 156 பேர் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 132 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவின்பேரில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி வேலைக்குச் செல்லும் 20 பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியத்திற்கான காசோலையை வழங்கினார்.