கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளை தவிர மற்ற காரணங்களுக்காக சாலையில் உலாவுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. திருமணம், மருத்துவம், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு கூட்டம் கூடுவதைத் தவிர்த்து முக்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பவருக்கும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருநின்றவூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முக்கிய உறவினர்களின் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் முகக்கவசங்கள் அணிந்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்தத் திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் 10 பேரும், மாப்பிள்ளை வீட்டார் சார்பில் 10 பேரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததோடு, முகக்கவசங்கள் அணிந்து கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எளிய முறையில் நடைபெற்ற திருமணம்