தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கவுள்ளார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதனை ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தற்போது பேனர் வைக்க தடை இருப்பதால் அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேனர், கட்சிக்கொடிகள் இடம்பெறவில்லை. அதற்கு மாற்றாக சாலையெங்கும் வாழைமரம் வைத்து அலங்கரிக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.
அதிமுகவில் ஒபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்தபின் நடைபெறும் 2ஆவது பொதுக்குழு கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலங்களின் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என 370க்கும் மேற்பட்டோர் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழுக் கூட்டத்தை பொறுத்தவரை, அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 2,700க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து தினகரனின் அமமுகவுக்கு சென்றவர்களில் பலர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு பதவி வழங்குவது. கட்சியின் அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து இந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் - ஓ. பன்னீர்செல்வம்