திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் 'கஞ்சா வேட்டை 2.0' தொடங்கி கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்கள் குறித்து கடந்த மார்ச் 28 முதல் முதல் தீவிர வேட்டை நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை: இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் போதை மாத்திரையை விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை செய்ய மாவட்ட தனிப்பிரிவினருக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில், தனிப்படையினர் போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களைக் குறித்து, தீவிரமாக தகவல் சேகரித்து வந்தனர். இந்நிலையில் தனிப்படையினருக்கு கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக, சில நபர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கிருந்த திமோதி, பிரித்திவி, ஸ்ரீராம், ரோஹன் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள் 26 எம், போதை தரும் குட்கா பொட்டலங்கள் ஒரு கிராம் மற்றும் போதை தரும் வில்லைகள் 26 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் தனது நண்பர்கள் திரிபுரா மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து அதனைத் தனித்தனியாக பிரித்து குறிப்பாக, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், ரயில் நிலையங்களிலும், ரயிலில் பயணம் செய்யும்போது விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர்.
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்:அவர்கள் கொடுத்த தகவலின்படி தனிப்படையினர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இருந்த ஹரீஷ், லோகேஷ், நரேஷ் ஆகியோரைப் பிடித்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும், ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த சச்சின், சரவணன், வாசு, ரகுமான், கௌவுஸ்ருதின், யூசுப் ஆகியோரிடமிருந்த போதை மாத்திரைகள் 1590 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேற்படி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த 12 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இந்தப்போதை மாத்திரைகளை உட்கொண்டால் சுமார் 4 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அதிகமான போதை தரக்கூடியதும், உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதும் என்பது தெரியவந்தது. மேலும், போதை மாத்திரைகளை வாங்கி வருவதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும், இரண்டு மோட்டார் சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
’ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை’ தொடங்கியதிலிருந்து இதுநாள்வரை திருவள்ளூர் மாவட்டத்தில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 64 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 37 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்புள்ள 175.75 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுவன்: ஓட்டுநரிடம் காவலர்கள் விசாரணை!