திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொதட்டூர்பேட்டை, அகூர், பள்ளிப்பட்டு, சுரக்காய் பேட்டை, பாண்ரவேடு உள்ளிட்ட 16 கிராமங்களில் கொண்டா ரெட்டிஸ் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதனிடையே அவர்களுக்கு கடந்த 40 ஆண்டு காலங்களாக சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என கொண்டா ரெட்டிஸ் மலை சாதி முன்னேற்ற சங்கம் சார்பாக அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தபால் மூலம் புகார் அனுப்பினர்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து வருகை தந்த தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினர் மாயா சின்தமன் ஐவினேடி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் இன்று திருத்தணி அருகே கீளபூடி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கொண்டா ரெட்டி இன மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது ஊர்மக்கள் பாரம்பரியமான கொட்டுமேளம் வாத்தியங்களோடு கலை நிகழ்ச்சிகளுடன் அலுவலர்களை வரவேற்றனர். பின்னர் பேசிய மாயா சிந்தமண் ஐவினேடி, இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்ததால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கூடிய விரைவில் தங்களுக்கு கொடுக்க வேண்டிய கொண்டா ரெட்டிஸ் சான்றிதழை தருவதற்கான ஏற்பாடுகளை மிக விரைவில் செய்து தருவேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் செல்வக்குமார், திருவள்ளூர் மாவட்ட பழங்குடியின் கொண்டா ரெட்டடிஸ் மலை சாதி முன்னேற்ற சங்கம் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மோடிக்கு மாற்றாக மாறும் அரவிந்த் கெஜ்ரிவால்!