திருவள்ளூர்: பட்டாசு கடைகளை திறக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி பண்டிகையையொட்டி, விதிகளின்படி தற்காலிகமாக பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் தற்காலிக உரிமம் பெற அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்கள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். கடை அமைவதற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டடத்துக்கு ப்ளூ பிரிண்ட் வரைபடம், கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம், வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை இணைத்து உரிமைக்கான கட்டணம் 500 ரூபாய் சேர்த்து அரசு கணக்கில் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
தங்களின் இணையவழி விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின்னர் இணையதளம் வாயிலாகவே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடன் தற்காலிகமாக உரிமத்தினை தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனக் கூறப்பட்டிருந்தது.