Student Gang-war: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன்.
இவரது மகன் குமார் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ வரலாறு முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 28) அவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார்.
திருநின்றவூர் ரயில் நிலையம் வந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு குமார் ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என உருக்கமாகப் பேசி இருந்தார்.
தொடர்ந்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர் உடற்கூராய்விற்காக திருவள்ளூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குமாருடன் பயின்று வரும் சக மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் குமாரின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே கெத்து காட்டுவதில் தகராறு ஏற்படுவதுண்டு.
கத்தி குத்து, அரிவாள் வெட்டு என ஆண்டுதோறும் ஏதாவது பெரிய பிரச்னை புறநகர் ரயிலில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவுக்கு இவ்விவகாரம் வளர்ந்திருக்கிறது.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகமும், அரசாங்கமும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி ஜாக்கிரதை - சைபர் கிரைம் எச்சரிக்கை