திருவள்ளூர்: தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு பேருந்து வழித்தடம் 103என் என்ற பேருந்தை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 3 பைகளில் 22 பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்த 45 கிலோ கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சின்னா (30), கம்பத்தைச் சேர்ந்த ராஜம்மாள்(55), கேரளாவை கோதுமணி (46) ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கைதான நபர்களுக்கு வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் காவலர்கள் அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா