திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 700 பேர் வரை, கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே, பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் முழு ஊரடங்கின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் சட்ட விரோதமாக குழந்தைகளைத் தத்தெடுப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தற்போது பரவி வரும் கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுத்து ஆதரவளிக்கும்படி வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரவி வருகிறது. இவ்வாறு குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பது இளைஞர் நீதிச் சட்டம் 2015இன் படி குற்றமாகும். தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறான செய்தியை வாட்ஸ்அப் குழுவிலோ, தனிநபர்களுக்கு இடையிலோ பரப்புவது குற்றமாகும்.
சட்டரீதியாக குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் www.care.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். தத்தெடுப்புத் தொடர்பாக ஆலோசனை பெற விரும்பினால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அல்லது சிறப்பு தத்து மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறக்க நேரிடும் பட்சத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ குழந்தைகளைப் பாதுகாத்திட குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, சைல்டு லைன் ஆகிய அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 5 நிமிட தாமதத்தால் பறிபோன 11 உயிர்கள்: திருப்பதியில் சோகம்!