திருநெல்வேலி: வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்துமனோ என்பவர் களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் அரிவாள்களுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் சுற்றித்திரிந்த முத்துவேல் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து சக கைதிகளால், தாக்கி கொலை செய்யப்பட்டார். சாதி மோதல் காரணமாக சிறைக் காவலர்களின் அனுமதியோடு திட்டமிட்டு முத்துமனோ கொலை செய்யப்பட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில் சிறை அலுவலர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், சிறைக் கண்காணிப்பாளர் உள்பட சிறை நிர்வாகத்தினர் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
உடலை வாங்க சம்மதித்த உறவினர்கள்:
இருப்பினும் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சிறைக் கண்காணிப்பாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 60 நாள்களுக்கும் மேலாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், முத்துமனோவின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், சிபிசிஐடி விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜூலை 01) அறிவித்தார்.
இதேபோல் உடலை பெற்றுக் கொள்ளும்படி நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு முத்து மனோ உடலை வாங்க உறவினர்கள் தற்போது சம்மதித்துள்ளனர்.
காவல் துறை பாதுகாப்பு:
அதன்படி இன்று (ஜூலை 02) உடலை பெற்றுக் கொள்கின்றனர். இதையடுத்து முத்துமனோவின் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் மூன்று இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தனர்.
அதேபோல் சமீபத்தில் ஊர்ப் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் தகவல் வெளியானது.
எனவே இன்று உடலைப் பெற்றுக் கொள்ளும்போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக தகுந்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை சிறையில் தாக்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி மரணம்!