கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள திரை அரங்குகள், வணிக வளாகங்கள், கோயில்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதிவரை மக்கள் வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும்பட்சத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில், காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகள் என்று வெளியே சுற்றித்திரிந்த 250 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடமிருந்து 108 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வராதீங்க