திருநெல்வேலி: நாங்குநேரியில் சக மாணவர்களால், பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் பள்ளியில் விசாரணை நடத்துவதற்காக திருநெல்வேலிற்கு வருகை தந்தார்.
தொடர்ந்து நாங்குநேரி பகுதியிலும், வள்ளியூர் பள்ளியிலும் ஆய்வை முடித்த பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரியை ஆணைய உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடமும் ஆணைய உறுப்பினர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணைய உறுப்பினர் ரகுபதி பேசுகையில், "தாக்குதலுக்கு ஆளான மாணவர் பயிலும் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வாரமாக அவர் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது. யாரிடமும் மாணவன் பிரச்சினை குறித்து தெரிவிக்கவில்லை.
ஒரு வாரமாக பள்ளிக்கு வராததற்கு வெவ்வேறு காரணங்களை அவர் தெரிவித்துள்ளார். நேரில் விசாரித்த போது தான் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை தெரிவித்து உள்ளார். மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று காலை தான் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து வெளியில் தெரிவித்து உள்ளார். நெருக்கமான நண்பர்களுக்கும் இது குறித்து தெரியவில்லை.
மேலும் படிங்க: "அரசின் பெருமை பேசுவதை விடுத்து, மாணவர்களை கவனிக்க வழி செய்க" - பள்ளிக்கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!
பள்ளி நிர்வாகத்தினருக்கும் இந்த சம்பவம் முன்கூட்டியே தெரியவில்லை. ஆகஸ்ட் 9 ஆம் தேதி தான தெரிய வந்துள்ளது. நாங்குநேரியில் மாணவர் வசிக்கும் தெருவில் வன்கொடுமை நடந்ததாக எந்த புகாரும் இதுவரை இல்லை. இச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசுக்கு ஆணையம் சார்பில் பரிந்துரை செய்ய உள்ளோம். வேறு எந்தெந்த பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் இருக்கிறது என்பது குறித்து ஆணையத்தில் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். நாங்குநேரி சம்பவம் குறித்து ஓரளவு இது தொடர்பான விசாரணை முடிந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்து பேசி அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவித்தார். நாங்குநேரியில் சக மாணவர்களால் பள்ளி மாணவர் தாக்கப்பட்டது சம்பந்தமாக விசாரணை நடத்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்துள்ளார்.
மேலும், பள்ளி மாணவர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் ரகுபதி அங்கு மனித உரிமை மீற பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிங்க: 70 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்க போராட்டம்... டெல்லி - கத்ரா விரைவுச் சாலை பணியில் விபரீதம்!