கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய பொருள்கள் தவிர அனைத்துக் கடைகளும் இயங்கவும், பொதுமக்கள் வெளியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இந்நிலையில், பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சோதனை செய்தபோது, பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் மைதானத்தில் குழிதோண்டப்பட்டு மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை வெளியே எடுத்தனர். சாக்கு பைகளில் மூட்டை மூட்டையாக கட்டி உள்ளே புதைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களில் மூன்று கம்பெனிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 90 லிட்டர் அளவிலான 500 மது பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இசக்கிமுத்து, பிச்சுமணி ஆகியோரை பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 500 மது பாட்டில்களும் பேட்டை காவல் நிலையத்தில் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க... தடையை மீறி மது விற்றவர் கைது: 1000 மதுபாட்டில்கள் பறிமுதல்!