திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கரோனோ தொற்று வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் மும்பை ஆகிய ஊர்களிலிருந்து வரும் நபர்களில் பலருக்குத் தொற்று உறுதியாவதால் நெல்லையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இன்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் 507 பேர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 289 பேர் வெளியூரிலிருந்து வந்தவர்களாவர்.
வெளியூர்களிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க மாநகர எல்லைகளில் ஏழு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் இ-பாஸ் இல்லாமல், காவல் துறையினரின் கண்ணில் சிக்காமல் சொந்த ஊர்களுக்குப் படை எடுத்து வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. எனவே இதுபோன்ற நபர்களை மருத்துவக் கண்காணிப்பு செய்வதில் அலுவலர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நெல்லைக்கு முறையான அனுமதியில்லாமல் வரும் நபர்கள் குறித்து 1077 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”நெல்லை மாவட்டத்தில் கரோனோவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் யாரேனும் வெளியூரிலிருந்து முறையான அனுமதியில்லாமல் வந்திருந்தால் 1077 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இதன் மூலம் கரோனோவைக் கட்டுப்படுத்த முடியும்.
தினமும் 50 முதல் 100 போன் கால்கள் வருகின்றன. பலர் தரகர்கள் மூலம் போலியான இ-பாஸ் தயாரித்துவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மட்டும் நெல்லையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் தரகர்களை அணுக வேண்டாம். சோதனைச் சாவடியில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊர் திரும்பும் வெளியூர்வாசிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா உறுதி!