நெல்லை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சமூகத்தின் அவலம் குறித்த கேள்விகளை முன்வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நெல்லை தங்கராஜ். நேற்றைய தினம் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் அஞ்சலிக்காக திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், வாழை படப்பிடிப்பு தளத்திலிருந்து நேரடியாக வருகை தந்து நெல்லை தங்கராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய போது, ’அவருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தங்கராஜ்’ என்று புகழாரம் சூட்டினார். அதேபோன்று, ’தேடி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைஞரான தங்கராஜ் அனைவரின் மனதிற்குள் சென்று ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்டவர் என்றும், அவரின் கனவு பயணம் மிகத் தாமதமாகவே தொடங்கியதாகவும்’ தெரிவித்தார். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டவர், அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.