நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை, களக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் முதன் முதலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துபாயிலிருந்து திரும்பிய நபர் ஒருவர் குணமாகி வீடு திரும்பினார்.
இதனைத் தொடந்து 14ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து 13பேர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 9 பேர், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், களக்காடு பகுதியைச் சேர்ந்த 2 பேர் அடங்குவர்.
இந்நிலையில் இன்று மாலை டவுண் பகுதியைச் சேர்ந்த 5 பேர், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் மருத்துவமனையிலிருந்து அனுப்பிய நிலையில் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து சென்ற அவர்கள் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா பீதி: 100 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் திருப்பத்தூர்!