திருநெல்வேலி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (6.03.2023) நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்தார். பின்னர் இன்று நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு, அதன்பின் குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் எட்டரை அடி உயரமுள்ள வெண்கல சிலையும் திறந்து வைத்து விட்டு, சாலை மார்க்கமாக நெல்லை வழியாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்றார்.
செல்லும் வழியில் நெல்லை - கன்னியாகுமரி மாவட்ட எல்கையில் உள்ள காவல்கிணற்றில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவ கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அந்த தொழிற்சாலையில் 147 வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அதனை அடுத்து பீகார், மத்திய பிரதேச சார்ந்தவர்களும் அதில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கிறது, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு விசயங்களை கேட்டறிந்தார்.
முதலமைச்சர் கேட்கும் கேள்விகளை ஹிந்தியில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மொழி பெயர்த்து தொழிலாளர்களிடம் தெரிவித்து, தொழிலாளர்கள் அளித்த பதில்களை தமிழில் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் திருப்பூரில் தாக்கப்படுவது பற்றியும் பல்வேறு தகவல்கள் வந்தது தங்களுக்கு அச்சமாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு முதலமைச்சர் அவை அனைத்துமே வதந்தி தான் என்றும், உங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்புக்கும் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என்றும், எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர். அதன் பின் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ தேவைகளுக்கு கையுறைகள் தயாரிக்கும் அந்த நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார். கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகளை வெளிவந்தன. இதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதாக சர்ச்சைகளும் எழுந்தன.
இதனையடுத்து தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு தனிப்படைகள் அமைத்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் நேரில் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள், பாதுகாப்பு, தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் வதந்திகள் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தமிழக அரசு உங்களுக்காக துணை நிற்கும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். இதுபோன்ற சூழலில் முதல்வர் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 'திராவிட மாடல்' எந்த அமைச்சருக்காவது அர்த்தம் தெரியுமா? - வைகைச்செல்வன் சவால்!