தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுன்டன்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(42). உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று மதியம் நீதிமன்ற வேலை முடிந்து கம்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன்பட்டி பகுதியில் உள்ள பழைய திரையரங்கம் அருகே இவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரஞ்சித்குமாரின் இருசக்கர வாகனத்தை இடித்துத் தள்ளி, காயமடைந்து கிடந்தவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பி ஓடினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் உருக்குலைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தமபாளையம் காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், ரஞ்சித் குமாரை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ரஞ்சித் குமார், கூடலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஜெயபிரபு, சொக்கர், மதன் உள்ளிட்டோருக்கு குள்ளப்பகவுண்டன்பட்டியில் சொத்து வாங்கியதில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அவர்கள் கூலிப்படையை ஏவி ரஞ்சித்குமாரை கொலை செய்திருக்கலாம் எனக் கூறி அவரது உறவினர்கள், உட்பட 10 பேர் மீது சந்தேகத்தின் பேரில், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து ரஞ்சித்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ரஞ்சித் குமாரை கொலை செய்வதற்காக ஏற்கனவே இரண்டு மூன்று முறை முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக கம்பம் கூடலூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தமபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னதாகவே காவல் துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்றனர்.
இதையும் படிங்க: வயலில் இறங்கி நடவு நட்ட முதலமைச்சர் - விவசாயிகள் பெருமகிழ்ச்சி