தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த ஜெயராமன் தனது மனைவி ராஜலட்சுமியுடன் வீட்டில் இருந்து பெரியகுளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கைலாசபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கம்பத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதில் எதிர்பாராத விதமாக முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி கீழே விழுந்ததில் ஜெயராமனின் மனைவி ராஜலட்சுமி(45) அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இந்த விபத்தில் ஜெயராமன் தலைகவசம் அணிந்திருந்ததால் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரத்தைச் சேர்ந்த பூபதிராஜா(20) தனது தாய் முருகேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இரு சக்கர வாகனம் பழனிசெட்டிபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மினி பேருந்தை முந்திச் செல்ல முயற்சித்தது. அப்போது நிலைதடுமாறி இருசக்கர வாகனம் சாலையில் விழுந்தது.
அந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த போர்வெல் லாரி, பூபதிராஜா மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் முருகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போர்வெல் லாரியை ஓட்டி வந்த மூர்த்தி(21) காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பழனிச்செட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருவேறு சாலை விபத்தில் கணவன் கண் முன்னே மனைவியும், தாய் கண் முன்னே மகனும் விபத்தில் உடல் நசுங்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் தீ விபத்து - மூன்று கூரை வீடுகள் தீயில் கருகி நாசம்!